சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வள்ளலார் சிலையை மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனம்.
சமூகத்தில் உள்ள வேற்றுமைகளைச் சனாதனம் எனச் சிலர் கூறி வருகின்றனர். அது தவறான தகவல். சனாதனம் குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் சனாதனம் குறித்துப் பேச வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசக்கூடாது.
வள்ளலார் மிகச்சிறந்த ஆன்மீக பேரோளி. அவரது சிலையைத் திறப்பதில் மிகுந்த பெருமையும், நல் வாய்ப்பும் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இந்த விழாவில் ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.