மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகான் பகுதியில் உள்ள எம்ஜி சாலையில் ஜெய் பவானி அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இக்கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ரவீந்திர அம்புல்கேகர் கூறுகையில், தீ விபத்து நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு குடிசை மாற்று திட்டத்தீன் கீழ் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் தீ தடுப்பு முறைகள் நிறுவப்படவில்லை. கட்டிடத்தில் லிஃப்ட் மிகவும் பழையது. மக்கள் பல்வேறு தளங்களிலும் சிக்கிக் கொண்டனர். 8 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜம்போ வாகனங்கள் உட்பட பல்வேறு நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தோம்” என்று தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.