காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையானதாக இல்லை என்றும், காவிரி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டு நாடகம் ஆடுவதாகவும், அதன் காரணமாகவே, தமிழக சட்டப் பேரவையில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப் பேரவை வளாகத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்குச் செல்கிறார். அங்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பேசுகிறார். எனவே, தனது நட்பு, கூட்டணி பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழகத்துக்குத் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை.
நதிநீர் தாவாக்களின்படி, பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஏதுவாக இருந்தாலும், சட்டத்தின்படி அந்த மாநிலத்திற்கான நீரைப் பெற வேண்டும். அதற்காகக் கொண்டுவரப்பட்ட, மசோதா அணை பாதுகாப்பு மசோதா.
நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்தபோது, மாநில சுயாட்சி என்று கூறி அதை திமுக எதிர்த்தது. ஆனால், தற்போது கர்நாடகாவில் நீரைப் பெற்றத்தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதுதான் திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு.
தமிழகத்தின் நீர் உரிமைக்காக பாஜக என்றும் குரல் கொடுக்கும். கடந்த 5 ஆண்டுகளில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியிலிருந்த போது இது போன்ற ஒரு சூழல் எழவில்லை. 5 வருட காலம் பாஜக அரசு இருக்கும்போது இதுபோல எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடனே இது போன்ற பிரச்சினை வருகிறது.
திமுகவும், காங்கிரஸும் பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். காவிரி நீரைக் கூட பெற்றுத்தர முடியாதவர்கள், பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள்? எனவே, மக்களை ஏமாற்றவே இந்த தீர்மானம். எனவே, தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மூலம் நிரந்தர தீர்வு காண முடியாது. எனவே, தமிழகத்தின் உண்மையான நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு அக்கறையுடன் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.