திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டுக்குள் சோதனைக்காகச் சென்ற வருமானவரித்துறையினர் தற்போது வரை தலைசுற்றிப்போய் உள்ளனர்.
காரணம், ஜெகத் தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 -ம் தேதி சாதாரணமாக சோதனையைத் தொடங்கினர். ஆனால், 10-ம் தேதி வரை 5 நாட்கள் வரை சல்லடை போட்டுச் சலித்தனர்.
எவ்வளவு ரொக்கம், எவ்வளவு ஆவணங்கள் என வருமான வரித்துறை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதேபோல, ஜெகத்ரட்சகன் தரப்பும் வாயே திறக்கவில்லை. ஆனால், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், நிலப் பத்திரங்கள், ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான், ஜெகத் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது வருமானவரித்துறை. அதுமட்டுமல்ல, கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் ஆவணங்களைச் சரி பார்க்க டெல்லியிலிருந்து 10 சிறப்புக் குழு வந்துள்ளதாம்.
இதனிடையே, வருமானவரித்துறையுடன் அமலாக்கத்துறையும் கைகோர்த்துள்ளதுதான் தற்போது ஹாட் டாபிக். ஜெகத் தரப்பில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக உறுதியாக நம்பும் அமலாக்கத்துறை அதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால், அடுத்து சில நாட்களிலேயே அமலாக்கத்துறை தனது வேலையைக் காட்டத் துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்த ஜெகத், வழுதாவூரில் பள்ளியில் படித்தார். ரயில்வே ஊழியராகத் தனது வாழ்கையைத் துவங்கியவர். சொற்ப நாட்களில் லட்சாதிபதி ஆனார். பின்னர் கோடீஸ்வரராக மாறினார். தற்போது மல்டி மில்லியனராக உள்ளார்.
இது எல்லாம் குறுகிய காலத்தில், எப்படி சாத்தியம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு விடை காண விரைவில் களம் இறங்கப்போகிறது அமலாக்கத்துறை.