மற்ற ஊர்களுக்கு எல்லாம் இல்லாத பெருமை சேலத்திற்கு உண்டு. காரணம், இங்கு உள்ள 8 மாரியம்மன் திருக்கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது “கோட்டை பெரிய மாரியம்மன்” என்று அழைக்கப்படுகின்றது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 18-ம் தேதி புதிய கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பெண்கள் புனித தீர்த்தக்குடம் மற்றும் முளைப் பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக திருக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாக சாலையில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டு, வேத, மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜை நடந்தது.
சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்டவை வெகுசிறப்பாக நடந்தன. முதல்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல், மகா தீபாராதனை செய்யப்பட்டது.
4-ம் கால வேள்வி வழிபாடு நிறைவு பெற்ற நிலையில், ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சந்நிதி விமானம், மகா கணபதி, பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.