சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று தேசிய ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா பல மாகாணங்களாகவும், சமஸ்தானங்களாகவும், சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்தது. 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே தேசமாக மாற்றி ‘இரும்பு மனிதர்’ ஆனார்.
1875-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ல் குஜராத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தார். பிரிட்டனில் சட்டப்படிப்பு முடித்த இவர், உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளைப் புறக்கணித்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும் பங்கேற்று முக்கிய பங்காற்றினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அயராது உழைத்தார்.