காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்திருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக அதிகளவில் பணம் கொடுத்து அனுப்பியதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி விசாரணையின்போது, மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள் ‘பாகல்’ என்ற பெயருடைய அரசியல்வாதியிடம் ஒப்படைக்கும்படி கூறி மேற்கண்ட பணத்தைக் கொடுத்து அனுப்பியதாக அசிம் தாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் நான் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் சூதாட்டத்திற்கு பந்தயம் கட்டுகின்றனர்.
அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் நேற்று வெளிவந்தன. அசிம் தாஸ் என்ற நபரிடம் இருந்து 5.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க உத்தரவிடப்பட்டதாக அசிம் தாஸ் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.
அப்படியானால், ராய்ப்பூர் சென்று பாகலுக்கு தேர்தல் செலவாக பணம் கொடுக்குமாறு அசிம் தாஸை சூதாட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் அனுப்பி வைத்தது உண்மையா? மகாதேவ் ஆன்லைன் புத்தகத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் உயர் பதவியில் இருக்கும் ஷுபம் சோனி என்பவரும் தனது நிறுவனத்தில் அசிம் தாஸ் பணிபுரிவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சூதாட்ட நிறுவத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் போராடுகிறது. காங்கிரஸ் பிரசாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.