வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வெங்காயம் கிலோ ரூபாய் 25 என்ற மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளது.
இதன்படி, நுகர்வோர் நலத் துறை, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு, மத்திய பண்டகசாலை, மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 25 என்ற மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
2023, நவம்பர் 2-ம் தேதி வரை, 21 மாநிலங்களில் உள்ள 55 நகரங்களில் நிலையான விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் உட்பட 329 சில்லறை விற்பனை மையங்களை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், என்.சி.சி.எஃப் 20 மாநிலங்களில் 54 நகரங்களில் 457 சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் வெங்காய இருப்பு 2.5 இலட்சம் மெட்ரிக் டன் என்பதிலிருந்து, இந்த ஆண்டு இருப்பு அளவு 7 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை, 5.06 இலட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள் முதல் செய்யப்பட்டு, மீதமுள்ள 2 இலட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பருவ மழை மற்றும் வெள்ளை ஈ தாக்குதலால் ஏற்பட்ட விநியோக இடையூறுகள் காரணமாக, கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் இருந்து தக்காளியின் விலை உயர்ந்தபோது, மத்திய அரசு தலையிட்டு, உற்பத்தி செய்யும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து முக்கிய நுகர்வு மையங்களில் மக்களுக்கு மானிய விலையில் வழங்கியது என்பது குறிப்படத்தக்கது.