திமுக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்குத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தலையிடவும் விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும், இது போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என தெரிவித்தார்.
கடந்த 2021 -ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு, தற்போது உயர்கல்வி அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். முறைகேடு வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.