மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாகப் புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது.
மேலும், இந்த புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கரையைக் கடக்கும் என்றும், கரையைக் கடக்கும்போது மணிக்கு 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், நேற்று பிற்பகலில் கரையைக் கடக்கத் தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்கதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசியதுடன், கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. கரையைக் கடந்த மிதிலி புயல், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.