நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 33 வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்குத் திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 20 -ம் தேதி மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், மறுமார்க்கமாகப் பெங்களூரு – யஷ்வந்த்பூரில் இருந்து 21-ம் தேதி இரவு 11 மணிக்குச் சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத் சிறப்பு ரயில் கூடுதலாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.