தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்னா என்ற 35 வயது யானை பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது .
இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
ஆனால், வனத்தில் இருந்து வெளியேறிய மக்னா, கோவை மாநகருக்குள் நுழைந்து, பேரூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள ஆற்றுப் படுகை அருகே சுற்றித் திரிந்தது.
இதனால், மக்னாவை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி, மந்திரிமட்டம் பகுதியில் விடுவித்தனர்.
ஆனால், அங்கிருந்தும் வெளியேறிய மக்னா யானை, சரளப்பதி கிராமப் பகுதியில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதனால், மக்னா மீண்டும் பிடிக்கப்பட்டு புதிய ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, சின்ன கல்லாறு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், வில்லோனி பகுதியில் உள்ள நாகமலை சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மக்னா யானை மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தது.
மக்னா யானை இறப்பில் பல மர்மங்கள் உள்ளதாகவும், அதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மக்னா யானை இறப்பு தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.