இன்னும் 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான பா.ஜ.க. முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றன. இதையடுத்து, தெலங்கானாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோராமில் சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமாவும் முதல்வர்களாகப் பதவியேற்று விட்டார்கள். இவர்களுடன் அமைச்சர்களும் பதவியேற்றிருக்கிறார்கள்.
ஆனால், பா.ஜ.க. வெற்றிபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இன்னும் முதல்வர்கள் பதவியேற்கவில்லை. இம்மாநிலங்களில் ஏற்கெனவே முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் ஆகியோருக்கு பதிலாக புதுமுகங்களை முதல்வர்களாக நியமிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதுதான் தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, 3 மாநிலங்களுக்கும் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய குழு ஒன்றையும் பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது. இக்குழுவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இக்குழுவினர் 3 பேரும் மேற்கண்ட 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்னும் 2 நாட்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களுக்கான முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முரளிதர ராவ் கூறுகையில், “3 மாநில முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுவால், மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு தங்களது குழு உறுப்பினர்களுடன் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வார்கள். இப்பணி இன்னும் 2 நாட்களில் நிறைவடைந்து விடும். ஆகவே, 2 நாட்களில் 3 மாநிலங்களுக்கான முதல்வர்களை பா.ஜ.க. தலைமை அறிவிக்கும்” என்று கூறியிருக்கிறார்.