மக்களவையில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த 22-வது நினைவு தினம் என்பதால், மத்திய அமைச்சர்கள் பலரும் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீஸாருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இதையடுத்து, மக்களவையில் இன்று வழக்கமான அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் குதித்த 2 பேர், கோஷமிட்டுக் கொண்டே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர்.
மேலும், கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளையும் வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியது. இதைக்கண்டு அச்சமடைந்த சில எம்.பி.க்கள் ஓட முயன்றனர். அதேசமயம், சில எம்.பி.க்கள் துணிச்சலாக மர்ம நபர்கள் இருவரையும் பிடித்து சபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதே சமயத்தில், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியேயும் 2 பேர் கோஷங்களை எழுப்பி க்கொண்டே “கலர்” புகைக் குண்டுகளை வீசினர். அந்த 2 பேரையும் வெளியே இருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவர் குர்பந்த்வத் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, வரும் டிசம்பர் 13-ம் தேதியும், இந்திய நாடாளுமன்றம் அதிரும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். ஆகவே, இந்த விவகாரத்தில் குர்பந்த்வத் சிங்கின் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது.
மேலும், இன்று அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவர்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையும், மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதேசமயம், மர்ம நபர்கள் வீசிய குண்டுகளும், அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகையும் ஆபத்தில்லாதது என்பது தெரியவந்திருக்கிறது. வெறும் பரபரப்புக்காக அவர்கள் இதை வீசி இருப்பதாகத் தெரிகிறது. எனினும், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.