மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாக்பூர் மாவட்டம் பசர்கான் கிராமத்தில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது.
திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.