2025-ஆம் ஆண்டு அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான படம் தான் ‘அனிமல்’. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதேபோல் இப்படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 1- ஆம் தேதி வெளியானது.
இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி ரூ.800 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த இரண்டாம் பாகத்திற்கு ‘அனிமல் பார்க்’ என பெயர் வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.