இன்று இரவு முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதீத கனமழை பெய்தது. இதனால், இரயில் தண்டாவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட இரயில் தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நெல்லை – திருச்செந்தூர் இரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்த சென்னை இரயில்வே அதிகாரிகள் இரயில் போக்குவரத்திற்கு அனுமதி அளித்தனர்.
இதனால், திருச்செந்தூரில் இருந்து முதல் இரயிலாக செந்தூர் விரைவு ரயில் இன்று இரவு 8.20 மணிக்கு புறப்படுகிறது. நாளை முதல் பயணிகள் இரயில் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.