ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற ‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம்’ நிகழ்ச்சியில் மத்திய ஜல்சக்தி, பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை, மகளிர் சுய உதவி குழுவினர், வேளாண் ஆராய்ச்சி மையம், இந்தியன் ஆயில் நிறுவனம், மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து ‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம்’ உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர்,
‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம்’ நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ள நிலையில், மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் நிதி 60 சதவீதமும் மாநில அரசு நிதி 40 சதவீதமும் உள்ளதாக அவர் தெரிவித்தார். உதாரணமாக பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் இது போன்று செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
2024-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என பிரதமர் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறார் என்றும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் 100% நிதி மாநில அரசுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டான 2047 ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் வேண்டும் என்பதற்காக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார் என்றும், 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மகளிர் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம் என மகளிருக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் இதனை அனைத்துப் பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு திட்டம், மண்வள அட்டை திட்டம், சொட்டு நீர் பாசனத் திட்டம், பயிர் காப்பீடுத் திட்டம் என ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். இதனை விவசாயிகள் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏழை எளிய மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை அளித்து வருவதாகத் தெரிவித்தார். ஏழைகளுக்காகவே வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கே தேடி வருவதாகவும் இதன் மூலம் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் நபார்டு வங்கி விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை, மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை, சுகாதாரத் துறை மூலம் பிரதமரின் ஆயுஷ்மான் திட்ட அட்டை, இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், தொழிலாளர் நலன் துறை மூலம் தொழிலாளர் நல அட்டை, அங்கன்வாடி மையத்திற்கு காய்கறி நாற்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.