மதுபான கொள்கை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்கும் டெல்லி முதலமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கை மூலம் சில குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டில்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.
பின்னர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அஜராகவில்லை.
இதனைத்தொடர்ந்து டிசம்பர் 22, ஜனவரி 3, ஜனவரி 18 ஆம் தேதிகளின் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சம்மனை புறக்கணித்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையினர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.