அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இதில், குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் நகரில், மிகப்பெரிய சர்ச் ஒன்று அமைந்துள்ளது. இந்த சர்ச்சுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஒரு கையில் குழந்தையுடன் சர்ச்சுக்குள் நுழைந்த பெண் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இதனால், சர்ச்சுக்குள் இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை நோக்கி சுட்டனர்.
இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் கையில் இருந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.