பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மற்றும் 500 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று சென்றது. இதை எல்லைப் பாதுகாப்பு படையினர் கவனித்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து, அந்த ட்ரோனை பின்தொடர்ந்தனர். தேடுதலின் போது, அமிர்தசரஸில் உள்ள பசாவ் கிராமத்தில் விவசாய நிலத்தில், ட்ரோன் ஒன்றும், ஹெராயின் போதைப்பொருள் ஒன்றையும் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து 500 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதைப்பொருளையும், சிறிய ட்ரோனையும் பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாரின் கூட்டு முயற்சியால், போதைப்பொருள் கடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.