தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ‘மோடி 3.0 – ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி’ நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றதும், நாட்டிற்குச் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும், தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்தும், தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு குறித்தும், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் குறித்தும், அரசியலில் ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்தும் அரங்கில் கூடியிருந்தவர்கள் எழுப்பிய கேள்வி பதில் உரையாடல் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். கள்ளுக்கடை திறக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இந்து சமய அறநிலையத் துறை அகற்றப்படும். ராமர் கோயில் கட்டி என்ன லாபம் என சிலர் கேட்கின்றனர். உலகத்தில் ஒரு கோயிலுக்கு, மசூதிக்கு, ஆலயத்திற்கு அவரவர் மதத்தை சேர்ந்தோர் செல்கின்றனர்.
இன்று சவுதி அரேபியாவில் மெக்கா உள்ளது. இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரைக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு கோடி பேர் செல்கின்றனர். இதனால் சவுதிக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் வருகிறது. கிறிஸ்தவ நண்பர்கள் வாடிகனுக்கு செல்கின்றனர். சென்ற ஆண்டு 80 லட்சம் பேர் சென்றனர். வாடிகனுக்கு வந்த வருமானம் 315 பில்லியன் டாலர். திருப்பதிக்கு 2.5 கோடி பேர் சென்றனர்.
கடந்தாண்டு வந்த வருமானம் 1200 கோடி. அடுத்தாண்டு அயோத்திக்கு ஐந்து கோடி செல்வர். அப்போது உ.பிக்கு வரக்கூடிய வருமானம் நான்கு லட்சம் கோடி ரூபாய். தமிழக அரசின் பட்ஜெட் 3 லட்சம் கோடி ரூபாய். அடுத்தாண்டு அயோதிக்கு செல்லக்கூடிய ஐந்து கோடி பேர் செல்லும் போது, அங்கு ஏற்படுத்தக்கூடிய பொருளாதார மாற்றம் மட்டுமே இத்தனை லட்சம் கோடி. இதில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரி மட்டுமே கிடைக்கும். இன்று தமிழகத்தில் எத்தனை கோயில், மசூதி, தர்கா, ஆலயம் உள்ளது. இதையெல்லாம் ஒன்றாக இணைத்தாலே சாதாரணமாக 3 லட்சம் கோடி வருமானத்தை கொண்டு வரலாம் எனத் தெரிவித்தார்.