கடந்த 10 ஆண்டு காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்கும் முக்கிய நாடுகளாக மாறி உள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முனிச் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனி நாளிதழ் ஒன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேட்டி எடுத்தது. அப்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியில், ரஷ்யா உடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, “பல தசாப்தங்களாக மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கின. இந்தியாவிற்கு அல்ல. இருப்பினும், இந்த போக்கு தற்போது மாறிவிட்டது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டு காலத்தில் மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்கும் முக்கிய நாடுகளாக மாறி உள்ளன.
அனைத்து நாடுகளும் தங்களின் கடந்த கால அனுபவங்களை வைத்து, பிற நாடுகளுடன் உறவைப் பேணி வருகின்றன. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், ரஷ்யா இந்தியாவின் உறவை எப்போதும் காயப்படுத்தியது கிடையாது. இந்தியாவும் ரஷ்யாவும் நிலையான உறவைப் பேணி வருகின்றன.
ரஷ்யாவுடனான வல்லரசு நாடுகளின் உறவுகளில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்துள்ளன. ஆனால், இந்தியா – ரஷ்யா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது. இதன் காரணமாகவே, தற்போது, ரஷ்யாவுடனான எங்கள் உறவு அமைந்துள்ளது.
சீனாவுடனான இந்தியாவின் உறவு அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கடினமானதாக இருந்து வருகிறது. நாங்கள் சீனாவைப் பார்ப்பதைப் போல், ஐரோப்பிய நாடுகளும் சீனாவைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
இதே போல்தான், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை பார்ப்பது போல், இந்தியா ரஷ்யாவை பார்க்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் நினைக்க முடியாது. இதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய போது, ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கில் இருந்து எரிசக்தியை கொள்முதல் செய்ய ஆரம்பித்தன. முன்னதாக, இந்தியா மத்திய கிழக்கில் அதிக அளவில் எரிபொருளை கொள்முதல் செய்து வந்தது. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போரின் போது, ஐரோப்பிய நாடுகள் அதிக விலை கொடுத்து எரிபொருள் வாங்கியதால், இந்தியாவை விட்டுவிட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில், நாங்கள் இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது விலை பல மடங்கு உயர்ந்திருக்கும். இதன் காரணமாக, மாற்று வழியில் எங்கள் எரிசக்தி சந்தையை நாங்கள் நிலைப்படுத்தினோம் என்று கூறினார்.