கடலூர் தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில், முந்திரி ஆலை தொழிலாளி கொலை தொடர்பாக, கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை, கடலூரில் இருந்து செங்கல்பட்டுக்கு மாற்றி, 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணை தொடங்கவில்லை என மனுதாரர் செந்தில்வேல் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில், விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்டு, விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.