கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அனுமதியின்றி பங்களா கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் உரிய அனுமதியின்றி மூன்று மாடிக் கட்டிடம் கட்டி வருவதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர், நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர், அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமலும், கட்டிடங்கள் கட்டி வருகின்றனர் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாகப் பங்களா கட்டியுள்ளனர்.
கட்டுமான பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.