கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக தனது அணியுடன் இணைந்தார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக தனது அணியுடன் இணைந்தார். இதை கொல்கத்தா அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐ.பி.எல் தொடருக்காக சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். அதேபோல் இன்று டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.
மேலும், விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார். விரைவில் ஆர்.சி.பி. அணியுடன் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.