2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டெல்லியில் வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடந்த தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும், அதுபோல், பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட ஒரு சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை இணைத்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800 425 6669 என்ற தொலைபேசி எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.