அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயலே காரணம் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,என்னுடன் பணியாற்றிய, மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது மதுபானக் கொள்கைகளை வகுத்து வருகிறார்.
அவருடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக வருத்தப்படுகிறேன். அவரது சொந்த செயலால் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் என அவர் கூறினார்.
கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய இயக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து பிரபலம் அடைந்தார். பின்னர் 2012ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய அவர், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.