நாக்பூர் மக்கள் குடும்ப உறுப்பினர் போல் தன்னை கருதுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.
ஜாதி, மதவாத அரசியல் செய்ததில்லை என்றும், நாக்பூரை எனது குடும்பமாக கருதுவதாகவும், அதேபோல் நாக்பூர் மக்களும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக கருதுவதாகவும் நிதின் கட்கரி கூறினார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாக்பூர் தொகுதி எம்பியாக நிதின் கட்கரி பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.