என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள், திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை முதல் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். நாளைய தினம் டிடிவி தினகரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் அமித்ஷா செய்கிறார் எனத் தெரிவித்தார்.
தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காக தினமும் என்னையும், பாஜகவையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் சின்னத்திற்காக முறையாக விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி தமிழகத்தை எட்டி பார்க்கிறார். கடந்த 3 வருடங்களில் ஸ்பெயின், சிங்கப்பூர், துபாய், ஜப்பான் சென்றார். இதனால், எந்த பயனும் இல்லை. முதல்வர் களத்திற்கு வராததால், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கொள்ளையடிப்பதையே முழுநேர பணியாக வைத்துள்ளனர். வீதிக்கு வந்தால் தான், மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது முதல்வருக்கு தெரியும்.
‛ ரோடு ஷோ’ வை முதல்வர் ஸ்டாலின் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்வர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். ரோடு ஷோ நடத்த முதல்வருக்கு பயம் ஏன்.
பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா நாளை தேனியில் ரோடு ஷோ நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்வர் செய்யவில்லை. மாய உலகத்திற்குள் அவர் கட்டிய கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு பிரதமரை அவர் விமர்சிக்கிறார். பிரதமர் உழைப்பை பாருங்கள். முதல்வர் உழைப்பை பாருங்கள் மக்களே முடிவு செய்யட்டும், யார் மக்களுக்காக உழைப்பது யார் என தெரியும்.
2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தி.மு.க.,வினர் ‛ வேல்’ ஐ தூக்கினர். இதனால் கடைகளில் வேல் இல்லை. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் ‛வேல்’ ஐ தூக்கினர். இன்று ராஜா சனாதன தர்மம், நான் ராம பக்தன், அயோ்தி சென்றேன் என்கிறார்.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய வியாதி மறதி. இந்த முறை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
சனாதன தர்மத்தை எதிர்த்தால் தினமும் எதிருங்கள். தேர்தலுக்கு முன் எதிர்க்கிறீர்கள். தேர்தலின் போது நெற்றியில் பட்டை போடுகிறீர்கள். தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கிறீர்கள். இது தான் இவர்களின் போலி சனாதனம் எனக் குற்றம் சாட்டினார்.
கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்த பிறகு மக்களிடம் உண்மை தெரிந்துவிட்டது. தேர்தலுக்கு முன்னர் கச்சத்தீவு பற்றி முதல்வர் ஒவ்வொரு மேடையிலும் பேசினார். நாங்கள் மக்களிடம் உண்மையை சொன்ன பிறகு திமுக.,வினர் ஏன் பதறுகின்றனர்?. எங்களுடைய கடமையை செய்துள்ளோம். மக்கள் வரவேற்கின்றனர். மீனவ நண்பர்களுக்கு 50 ஆண்டுக்கு பிறகு உண்மை தெரிந்துள்ளது.
வாரிசு அரசியல்வாதிகள் இடையே கொச்சையாக பேசுவதில் போட்டி நடக்கிறது. இந்திய அளவில் கொச்சையாக பேசுவதில் உதயநிதி முதலிடத்தில் வருகிறார். அருவருக்கத்தக்க வகையில் பெண்கள், தாய்மார்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.
ஒரு அறையில் நண்பர்களுடன் பேசுவதை பொது வெளியில் பேசுகிறார். அவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். உதயநிதி மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
29 பைசா மோடி என உதயநிதியின் பேசினால், அவரை பீர், சாராயம், டாஸ்மாக், ட்ரக் உதயநிதி என்று அழைப்போம். நாங்கள் மரியாதைக்காக அமைதியாக இருக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை வைத்து நாடகம் நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்களும் நாடகம் நடத்துவதாக சொல்கிறோம். பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது. கச்சத்தீவு இந்தியாவுக்கு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
1974ல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு இன்று கேள்வி கேட்டால் அதை விமர்சிப்பதை ஏற்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது.
என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார். ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்ததை சிதம்பரத்திற்கு தெரியும். பொது வெளியில் இருப்பதால் தான் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு தொடர்பான தகவலை பெற முடிந்தது எனத் தெரிவித்தார்.