சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை மீண்டும் தொடங்குவது குறித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த போட்டிகள் இந்தியாவில் நான்கு முறையும் தென்னாப்பிரிக்காவில் இரண்டு முறையும் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா இரண்டு முறையும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இந்தியாவிலிருந்து மூன்று அணியும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தலா இரண்டு அணியும், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து ஒரு அணியும் அந்த சமயத்தில் பங்கேற்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20-யை மீண்டும் தொடங்குவது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லியுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசிவருவதாக விக்டோரியா கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியுடன் நான் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் டி20-க்காக பேசி வருகிறேன். ஏனென்றால் அதை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ECB மற்றும் பிசிசிஐ இடையே சாம்பியன்ஸ் லீக் பற்றி உரையாடி வருவதை நான் நன்கு அறிவேன்” என்று பேசியுள்ளார்.