ஆந்திராவில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் பலரையும் ஆச்சரிய பட வைத்திருக்கிறது. அவரது சொத்து மதிப்புகள் எவ்வளவு என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .
ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் சந்திரசேகர். இவர் வேட்புமனு தாக்கல் செய்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று சமர்ப்பித்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 785 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
அவர் பெயரில் 2448 கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். தனது மனைவி கோனேரு ஸ்ரீரத்னா பெயரில் 2343 கோடியே 78 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாகவும், குழந்தைகள் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்துக்கு Line of Credit , லைன் ஆஃப் கிரெடிட் வகையில் அமெரிக்காவின் JPMorgan Chase & Co. ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின் பொறுப்பில் ரூ.1,138 கோடி உள்ளதாக கூறியுள்ளார். யாரப்பா இந்த ஆள் என்று தானே கேட்கத் தோன்றுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 1999 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்றுள்ள சந்திரசேகர், மேற்படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்து ,தொழில் ரீதியாக புகழ்பெற்ற மருத்துவராக விளங்குகிறார்.
அமெரிக்காவில் மெடிக்கல் லைசென்ஸ் பெறுவதற்கான The United States Medical Licensing Examination (US MLE) எம்எல்ஈ தேர்வில் வெற்றி பெற இந்திய மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தார்.
அது மட்டுமில்லாமல் பல்வேறு வணிகத் துறைகளில் ஈடுபட்டு, வருகிறார். சந்திர சேகரின் பெரும்பாலான சொத்துக்கள் அமெரிக்காவில் இருக்கிறது என்றாலும் 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து மட்டும் அவருக்கு ரூ 3.68 லட்சம் ஆண்டு வருமானம் வந்ததாகவும் அதே ஆண்டில் அவரது மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்த வகையில் 605.5 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் அசையும் சொத்துக்களின் அடிப்படையில் பல்வேறு முதலீடுகள் உட்பட 2,316 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளார் என்றால் அவரது மனைவி .2,289 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை வைத்துள்ளார். இது தவிர, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 101 நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
கணிசமான செல்வம் மற்றும் செல்வாக்கு இருந்தபோதிலும், சந்திரசேகர் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. வரும் மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் . சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
ஆந்திராவில் உள்ள குண்டூர் மக்களவைத் தொகுதியில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) கே.வெங்கட ரோசய்யாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரசேகர், போட்டியிடுகிறார்.