தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத செய்தியறிக்கையில், அதன் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா எழுதியுள்ள கட்டுரையில், தீவிர காலநிலை மாற்றங்கள், சர்வதேச புவிசார் அரசியலில் நீடிக்கும் பதற்றம், கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை ஆகியவை பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளார்.
2024-ம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடிய வாய்ப்புள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை சுட்டிக் காட்டியுள்ள அவர், இதன் காரணமாக உலகம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளதும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது