ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், பாஜகவுடன் உள்ள நெருக்கத்தால் பினராயி விஜயன் கைது செய்யப்படவில்லை என காங்கிரஸ் பதில் அளித்துள்ளது. இதனால், கேரள அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. அங்கு நடப்பது என்ன? என்பது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி இண்டியா கூட்டணியை உருவாக்கி இருந்தாலும் , நாட்டின் பல மாநிலங்களில் இண்டியா கூட்டணி இல்லை என்றே சொல்ல வேண்டும் .
கேரளாவைப் பொறுத்தவரை , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் . அவரை எதிர்த்து சிபிஎம் தலைவர் ஆனி ராஜா போட்டியிட அறிவிப்பு வந்ததில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிற்கும், காங்கிரசுக்கும் இடையே வார்த்தை போர் தொடங்கியது .
அதன் உச்சக் கட்டமாக ‘வரவிருக்கும் தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் காங்கிரசுக்கு வாக்களிப்பதில் எந்த பயனும் இல்லை ‘என்றும், குறிப்பாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது காங்கிரஸ் அதனை ஆதரித்தது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் , குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்றும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்ட போதும் ராகுல் காந்தி வாயே திறக்கவில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் மிகக் கடுமையாக பேசிய பினராயி விஜயன், ஆர்.எஸ். எஸ் கொள்கைகளுடன் காங்கிரஸ் ஒத்துப் போகிறது என்றும், சங் பரிவார் மன நிலையே ராகுல் இடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதன் உச்சக் கட்டமாக , ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல் வாதியே இல்லை என்றும் கடுமையாக குற்றஞ் சாட்டியிருந்தார் பினராயி விஜயன்.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி , பினராயி விஜயன் 24 மணிநேரமும் தம்மை மட்டுமே எதிர்க்கிறார் என்றும், பாஜகவை அவர் எதிர்ப்பதே இல்லை என்றும் பதிலடி கொடுத்தார். அப்படி எதிர்த்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை மோடி அரசு சிறையில் அடைத்திருக்கும் என்றும் விஜயனை கைது செய்யாதது ஏன் ? என்றும் ராகுல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
காந்தி என்ற பெயரை உச்சரிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லாத ஆளாக ராகுல் மாறிவிட்டார் என்றும் கேரளத்துக்கு வந்து பாஜகவுக்கு ஆதரவு நிலைபாட்டை ராகுல் காந்தி எடுத்திருப்பது அவரது அரசியல் பக்குவமற்ற தன்மையையே காட்டுகிறது என்று சி பி எம் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர், ராகுலின் உரைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
தேர்தல் பிரசாரம் தொடங்கியதிலிருந்தே ராகுல் காந்தியை விமர்சிப்பது மட்டும் தான் பினராயி விஜயனின் பிரதான லட்சியமாக இருந்தது. இது பா.ஜ.க-வுடன் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தாம கூட பயன்படுத்தாத வார்த்தைகளை பயன்படுத்தி ராகுல் காந்தியை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சிக்கிறார் என்று பிரதமர் மோடி சொல்லி இருந்தார் என்றும், ராகுல் காந்தி மட்டுமல்ல அந்த குடும்பத்தையும் அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வரும் 26ஆம் தேதி வாக்குபு்பதிவு நடைபெற உள்ள நிலையில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை போர் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கேரளா அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது .