அதிமுக தொண்டர்கள் மற்றும் தமது ஆதரவாளர்களுக்கு விண்ணப்ப படிவம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் சசிகலா. இதன் மூலம் அதிமுகவை தமது தலைமையின் கீழ் கொண்டு வர சசிகலா முயற்சிகளை தொடங்கியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன? என்பதை அலசும் ஒரு செய்தி தொகுப்பு .
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலான அதிமுக பின்னடைவை சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் அதிமுக தொண்டர்களின் கோபத்துக்கு எடப்பாடி பழனிச் சாமி ஆளாகலாம் என்றும், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் இழந்து மாற்று வழியைத் தேடும் நிலை ஏற்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதனால், தேர்தல் முடிவுக்கு பிறகு ஏற்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி அதிமுகவைக் தன் வசத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சசிகலா திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக தெரியவருகிறது.
அதற்காக , புதிய விண்ணப்பப் படிவம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும், அதனை தனது ஆதரவாளர்களுக்கும்,அதிமுக தொண்டர்களுக்கும் அனுப்பி, பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி என்ன விண்ணப்பம் என்று தானே கேட்கிறீர்கள்? அதிமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ,தங்கள் பெயர், முகவரி தொலைபேசி எண், ஆதார் எண், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம், சட்டமன்ற தொகுதி, கல்வி தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, 2017 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்று கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுபவராக இருந்தால், அந்த அமைப்பின் பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சசிகலாவின் முகாம் அலுவலகமான 95, ஜெயலலிதா இல்லம், போயஸ் கார்டன், சென்னை 86 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அனுப்ப முடியாதவர்கள் ஆன் லைன் மூலமாகவும் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற வகையிலேயே இந்த வேண்டுகோளை அவர் அனுப்பி இருக்கிறார். வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தனக்கான ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து கொண்டு ,அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம் என்ற முடிவில் சசிகலா இருப்பதாக சொல்லப் படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவில் இணைந்து செயல்படும் முடிவில் இருந்தபோதிலும், அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சசிகலா கட்சிக்குள் வருவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
எடப்பாடிக்கு எதிரான சட்டப் போராட்டம் நடத்திய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தனி தனியே பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் தன்னோடு இணைத்து கொண்டு அதிமுகவை தன் வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சசிகலா தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சசிகலா தன் ஆட்டத்தைத் தொடங்குவார் என்று சொல்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.
வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார் என்று பெயர் குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமியை சுட்டிக் காட்டி சசிகலா பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.