பாஜக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விரைவில் தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்படும் என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை, பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் திறந்து வைத்தார்.
அப்போது இளநீர், கரும்பு ஜூஸ், மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது பேசிய வினோஜ் பி.செல்வம், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட பாஜக ஆதரவாளர்களின் பட்டியலை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், விரைவில் தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வாக்குரிமையை பறித்து தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் கோழைத்தனத்தைதான் திமுக கையாண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜூன் 4-க்கு பிறகு திமுகவினர் தங்களது கையாலாகாத தனத்தால் தோற்றுப் போனால் இவிஎம் இயந்திரத்தை குறை கூறுவார்கள் என தெரிவித்தார்.