பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பை ஏப்ரல். 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டுள்ளார்.