காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசு, காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உழைப்பாளர் தினத்தை ஒட்டி சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசின் பிடிவாதப் போக்கு ஏற்புடையதல்ல எனவும், விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கத் தவறிய அரசாக திமுக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், கல்குவாரிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.