தடை செய்யப்பட்ட SIKHS FOR JUSTICE என்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளார். இதன் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த மார்ச் மாதம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவால் கைதான நிலையில், காலிஸ்தாதான் தீவிரவாதியும் , SIKHS FOR JUSTICE தீவிரவாத அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில் , டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த 5 மணி நேரத்தில் காலிஸ்தான் தீவிரவாதி பேராசிரியர் தேவிந்தர் பால் சிங் புல்லர் விடுதலை செய்யப்படுவார் என்று கெஜ்ரிவால் உறுதி அளித்ததாக கூறி இருந்தார்.
இந்த உதவிக்காக, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தேர்தல் நிதி வழங்கியது என்றும் கடுமையாக குற்றம் சாட்டை வைத்திருந்தார்.
மேலும் அந்த வீடியோவில் குர்பத்வந்த் சிங் பன்னுன், “நேர்மையான இந்திய இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும், நேர்மையற்ற இந்திய இந்துக்களை விட ஆபத்தானவர்களாக மாறிவிட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
2014-ல் கெஜ்ரிவால் ஆட்சியில் இல்லாத நிலையில் அமெரிக்காவிற்கு வந்தபோது, தேவிந்தர் பால் சிங் புல்லரை விடுவிப்பதாக உறுதியளித்ததாகவும், கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இன்னும் புல்லர் விடுதலை செய்யப்படவில்லை என்றும் கோபமாக பேசி இருந்தார் பன்னுன்.
இந்த வீடியோ தான் இப்போது கெஜ்ரிவாலுக்கு கழுத்தில் மாட்டிய கயிறாகி இருக்கிறது.
வீடியோவைப் பார்த்த, ‘உலக இந்து கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் தேசிய பொதுச் செயலர் அஷூ மோங்கியா, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ,டெல்லி துணை நிலை ஆளுநருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.
அதில், ஆம் ஆத்மி கட்சிக்கு SIKHS FOR JUSTICE என்ற காலிஸ்தான் தீவிர வாத அமைப்பு நிதியுதவி அளித்தது பற்றி விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் இணைத்திருந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் ஆம் ஆத்மி கட்சி சுமார் 133 கோடி ரூபாயை தீவிரவாதிகளிடம் இருந்து நிதியாக பெற்றதற்கான சான்றுகளையும் இணைத்திருந்தார்.
கெஜ்ரிவாலுக்கு எதிரான இந்த புகாரை, NIA விசாரிக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை செயலருக்கு அமைச்சருக்கு , டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கிய நபர் , ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் வெளிநாட்டுப்பிரிவின் அலுவலகப் பொறுப்பாளரான முனிஷ் ரைசாடா. 2014ம் ஆண்டு டிசம்பரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்ற வழியில், கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக நியூ யார்க் மற்றும் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கெஜ்ரிவால்.
நன்கொடை வழங்க விரும்புவோருடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் , “கணிசமான தொகையை” வசூல் செய்தார் என்று அமெரிக்க ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ,கெஜ்ரிவால் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு “புல்லருக்கு கருணை” கோரி கடிதம் எழுதி இருக்கிறார். இந்தப் பின்னனியில் தான், கெஜ்ரிவால் மீது NIA விசாரணை நடத்த ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
2011ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் ,டெல்லியின் முதல்வராகி , ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கிறார். இப்போது , இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பு , அவர்களிடம் பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.