இந்தியாவில் வங்கிகளின் நிகர லாபம் முதன்முறையாக மூன்று லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு திருப்பம் என்றும் கூறியிருக்கிறார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய வங்கிகள் லாபத்தை ஈட்டுகின்றன என்பதை உலக பொருளாதார வல்லுநர்கள் ஆச்சரியமாகவே பார்க்கிறார்கள்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பல ஆண்டுகளாகவே, அதிக லாபம் ஈட்டும் துறையாக IT சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இருந்து வருகின்றன. இந்த நிதியாண்டில் அது மாறி இருக்கிறது என்பதே ஆச்சரியம் . மென்பொருள் சேவை நிறுவனங்களை விடவும் வங்கிகள் அதிக லாபத்தை ஈட்டி இருக்கின்றன.
கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகமாக, இந்த நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் 1.4 லட்சம் கோடி ரூபாய் லாபமடைந்துள்ளது.
சென்ற ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாக இந்திய தனியார் வங்கிகள் 1.7 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.
சொல்லப் போனால், 3 லட்சம் கோடி ரூபாய் நிகர லாபம் என்பது நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த காலாண்டு லாபமாகும்.
அதே நேரத்தில், பட்டியலிடப்பட்ட IT சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு, முதல் காலாண்டில், கிட்டத்தட்ட 1.1 லட்சம் கோடி ரூபாய் தாம் நிகர லாபமாக ஈட்டியுள்ளன. இது மொத்த வங்கிகளின் லாபத்தை விட குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஆக்கப் பூர்வமான மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தது ? என்ற கேள்விக்கு, வங்கிகளின் நிகர லாபம் அதிகரிப்பதற்கு மத்திய அரசின் சரியான கொள்கை முடிவுகளே அடிப்படை காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ICRA இன் நிதித் துறை மதிப்பீடுகளின் துறைத் தலைவர் சச்சின் சச்தேவா கூறும் போது, “வங்கிகள் தெளிவான கடன் விதிமுறைகளைப் பின்பற்றியதாலும் , கடன் மீட்பு நடவடிக்கைகளிலும் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலும், நிகர வட்டி வருவாய் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக வங்கியின் லாபமும் அதிகரித்தது என்று கூறியிருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. ஓய்வூதியத்திற்காக செய்ய வேண்டிய ஒரு முறை ஒதுக்கீடு இல்லாவிட்டால் நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் அதிக நிகர லாபத்தைப் பெற்றிருக்கும்.
இருப்பினும், ஓய்வூதியம் சார்ந்த நடைமுறைகளில், ஓய்வூதிய ஒதுக்கீடு எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், வங்கிகளின் பங்குகளில் மூலம் அது லாபத்திற்கு வழிவகுத்தது என்றும் வங்கித்துறை நிபணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய பொருளாதார கொள்கை அறிமுகமான ஆண்டிலிருந்தே இந்தியாவின் வங்கிகள் பெரிதாக லாபத்தைப் பெறவில்லை. பெரிய கடன்களைக் கொடுத்து சிக்கலில் மாட்டியிருந்த இந்திய வங்கிகள், 2014 ஆம் ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாக கடன் சுமைகளில் இருந்து மீண்டன.
கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள், வங்கிகள் கடன் வழங்குவதில் ஒரு ஒழுக்கத்தைக் கொண்டு வந்தன. மேலும் பொறுப்பான கடன்களை வழங்க வழி காட்டின . இது மட்டும் இல்லாமல் , வங்கிகளின் மேம்படுத்தப் பட்ட நிர்வாகத்தை உறுதி செய்தன.
தொழில்நுட்பத்தை ஏற்று, வங்கிகளின் ஒருங்கிணைப்பு, மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பான தேவையான சேவைகள், தந்ததால் , பொதுமக்களின் நம்பிக்கையை வங்கிகள் பெற்றன. அந்த நம்பிக்கைகள் அடையாமலும் பாதுகாக்கப் பட்டன.
வங்கிகளின் செலவினங்களில் ஏற்பட்ட புதிய வழிமுறைகள், சில்லரைக் கடன்களை விரிவுப் படுத்த அனுமதி அளித்தது. இத்தகைய கொள்கை மாற்றங்களே வங்கிகளின் லாபத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள் வங்கித்துறை நிபுணர்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் நஷ்டத்தில் இருந்தன. ஏழைகளுக்கு வங்கி சேவைகள் கிடைக்காமல் இருந்தன. இன்று லாபமீட்டும் நிலைக்கு வங்கிகள் சென்றிருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மேலும் வங்கிகளின் இந்த லாபம் , இது ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கும் கடன் பெற உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.