ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்பாராத விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை உருவானது.
இருந்த போதிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரான்- அஜர்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய மூன்றாவது அணையின் திறப்பு விழாவில், அஜர்பைஜான் அதிபருடன் ஈரான் அதிபர் ரய்சியும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி , ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அஜர்பைஜான் வனப்பகுதி மேல் பறக்கும்போது எதிர்பாராத வகையில், ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் மலையில் தடுமாறி தரை இறங்கியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர் உசி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதாக சொல்லப்பட்டது.
தகவலறிந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஈரான் அதிபருடன் வெளியுறவுத் துறை அமைச்சர், கிழக்கு அஜர்பைஜானின் தலைவர் உள்ளிட்டோர் பயணித்தனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் உடல்கள் முழுவதுமாக கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த உடல்களில் ரைசியின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.
ஈரான் இராணுவம் உட்பட பாதுகாப்பு மீட்பு படையினரின் கடும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி விபத்தில் பலியானதாக ஈரான் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அதிபரின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபரின் சோகமான மறைவால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்திய அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும் என்றும் கூறி இருக்கிறார். மேலும் இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் கசப்புக்கடை காரர் என்று மேற்கத்திய ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் படும் இப்ராஹிம் ரய்சியின் அரசியல் வாழ்க்கை ஈரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகே தொடங்கியது.
ஈரானின் அதிக அதிகாரம் உள்ள தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமானவராக அறியப்படும் இப்ராஹிம் ரய்சி, சாதாரண வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு குறுகிய காலத்திலேயே, ஈரானின் அதிபராக உயந்தவர்.
மிதவாதியான ஹசன் ரூஹானிக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு ஈரானின் அதிபரான இப்ராஹிம் ரய்சி, பெரும் நெருக்கடிகளையும் ,உள்நாட்டு கலவரங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக பதவியேற்ற உடனேயே, பெண்களின் உடை மற்றும் நடத்தையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் “ஹிஜாப் மற்றும் கற்புச் சட்டம் ” ஈரானில் நடைமுறை படுத்தப் பட்டது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 16 ஆம் தேதி, பெண்களுக்கான ஆடை விதிகளை மீறியதாக 22 வயதான ஈரானிய-குர்திஷ் பெண் மஹ்சா அமினி கைது செய்யப்பட்டார்.
காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெருமளவில் நடைபெற்றன.
இதேபோல், 1979ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு , ஈரானில் , இஸ்லாமிய மதகுரு ஆட்சியாளர்களுக்கு எதிராக , நாடு தழுவிய போராட்டங்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தன.
போராட்டக்காரர்களை ஒடுக்க , நாடு முழுவதும் “மரணக் குழுக்கள்” என்று அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த தன்னிச்சையான அந்த விசாரணைகளின் முடிவில், பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஐ நா மனித உரிமை குழுவினரின் அறிக்கைபடி 5000-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அப்போது இந்த மரணக் குழுவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் தான் இந்த இப்ராஹிம் ரய்சி.
சமீபத்தில் காசா- இஸ்ரேல் போர் இந்த அளவுக்கு தீவிரமானதற்கும் இப்ராஹிம் ரய்சியின் கடுமையான போக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது .
கடந்த ஏப்ரல் மாதம், நூற்றுக்கணக்கான ஏவுகணைகளால் நேரடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் ஒரு அதிபர் பதவியில் இருக்கும் போது மரணமடைந்தால் , நாட்டின் அனைத்து விஷயங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நாட்டின் முதல் தலைவரின் வழிகாட்டுதலின் படி முதல் துணை அதிபர், அதிபராக பணியாற்றுவார் என்றும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபருக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்நாட்டு இஸ்லாமிய அரசியல் அமைப்பு தெரிவிக்கிறது.
63 வயதான இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதை தொடர்ந்து , துணை அதிபர் முகமது மொக்பர் அதிபராக பதவியேற்க இருக்கிறார்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகள், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடனான போர், அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சு வார்த்தைகளில் இழுபறி என்று பல சிக்கல்களில் இருக்கும் ஈரானுக்கு, இப்ராஹிம் ரைசியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்து விட்டது.