ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்ந்து வந்த தற்கொலைகள் தற்போது அதிகரித்து விட்டதாகக் கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி மாங்காடு சீனிவாசன், 15-ம் தேதி சென்னை கொருக்குப்பேட்டை மருத்துவ மாணவர் தனுஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் 9 நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதே இதற்கு ஒரே தீர்வு என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில்,
அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று வேடிக்கைப் பார்க்கப் போகிறதா அல்லது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.