“தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசியவர்,
” 2024-ல் பாஜக தனித்து 370 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்று பெறும்” எனவும், “மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி” என்றும் கூறினார். குறிப்பாக, “அனைத்து மாநிலங்களிலும், பாஜக இம்முறை தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கும்” என உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், “தமிழத்தில் முதலில் மும்முனைப் போட்டி இருந்த நிலையில், பின்னர் இரு முனைபோட்டியானது” எனவும், “தமிழகத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்” என்றும் கூறினார்.
“ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன” என தெரிவித்த அண்ணாமலை “இதுகுறித்து அதிமுகவினருடன் விவாதிக்க தயார்” எனக் கூறினார். “இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை ” எனவும் “மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது” எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கருத்துரிமையை நசுக்கி கைது செய்யக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் கருத்து உரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது” எனக் கூறினார்.
“நடிகர் பிரகாஷ்ராஜின் குரலுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்த அண்ணாமலை, “காமராஜர் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியோடு ஒப்பிட்டு செல்வப்பெருந்தகை இழிவு படுத்திவிட்டார்” எனவும் குற்றம் சாட்டினார்.