“தேர்தல் போரில் தாம் வெற்றியை இழந்திருந்தாலும், களத்தை இழக்கவில்லை” என்றும், “களம் இன்னும் தமக்கு சாதகமாகவே உள்ளது” என்றும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறாதது வருத்தம் அளித்தாலும், அதனால் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆளும் கட்சியான திமுக, அதிகார பலம், பண பலம், படை பலம் என அனைத்து பலத்தையும் பயன்படுத்தினாலும் கூட, கடந்த 2019 -ஆம் ஆண்டு தேர்தலைவிட, 7 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது” என்றும்,
“ஆண்ட கட்சியான அதிமுக கடந்த தேர்தலைவிட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும், 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெறமுடியவில்லை” அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.
“திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே, தமிழக மக்கள் விரும்புவதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்றும், “2026 சட்டப்பேரவை களம் நமக்கு சாதமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ள அவர், “2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.