இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் தமக்கு வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபருக்கு மோடி நன்றி தெரிவித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு தைவான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா,ரஷ்யா,பிரிட்டன்,இஸ்ரேல்,ஈரான்,பிரான்ஸ் ,கனடா,ஆஸ்திரேலியா தாய்லாந்து,நியூசிலாந்து ,பிரேசில் பிலிப்பைன்ஸ், ஐஸ்லாந்து,மாலத்தீவு, நேபாளம்,வங்கதேசம், பூட்டான்,தைவான்,இந்தோனேசியா, மொரிஷியஸ், இலங்கை,கென்யா,ஜமைக்கா, பார்படாஸ் (Barbados), என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றதைப் பாராட்டி ,தைவான் அதிபர் வில்லியம் லாய், தனது எக்ஸ் தளத்தில், ‘ தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். வளர்ந்து வரும் தைவான் – இந்தியா கூட்டமைப்பை மேம்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்திய – பசிபிக் மண்டலத்தில் அமைதியை நிலைநிறுத்தவும் இணைந்து செயல்படுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.
தைவான் அதிபர் வில்லியம் லாய் க்கு தனது எக்ஸ் பதிவின் மூலம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, தைவான் அதிபருக்கு நன்றி தெரிவித்தற்கு சீனா தன் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ கூறுகையில், ‘ தைவான் மண்டலத்துக்கு அதிபராக யாரும் கிடையாது. தைவான் சீனாவின் எல்லைக்குள் இருக்கும் ஒரு பகுதியாகும். உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. இது மறுக்க முடியாத உண்மை என்று கூறியுள்ளார். மேலும் அவர், தைவானின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருப்பதுடன், ஒரே சீன கொள்கைக்கு எதிரான செயல்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தைவான்,வெளியுறவு துறை அமைச்சகம் தமது எக்ஸ் பதிவில், இரண்டு ஜனநாயக நாட்டின் தலைவர்களுக்கு இடையயேயான பரஸ்பர வாழ்த்து பரிமாற்றத்தைச் சீனா எதிர்ப்பது ,முற்றிலும் நியாயமற்றது என்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் ஒருபோதும் நட்பை வளர்ப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.