தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால், கட்சியின் உறுப்பினர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினர். உறுப்பினர்கள் கொந்தளிக்கும் வகையில் தலைவர்கள் கூட்டத்தில் என்ன பேசினார்கள்? சலசலப்புக்கு யார் காரணம்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாக கூறினாலும், பா.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வருவது கடந்த கால சம்பவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
அந்தவகையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து கூட்டத்தில் வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மக்களவை தேர்தவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், கட்சியின் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து விவாதிப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மற்ற அணிகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த கூட்டம், இடையில் தலைவர்கள் பேச தொடங்கியதும் பூகம்பம் வெடித்தது.
முதலில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையோ, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை ஆண்டுகள் தான் பிற கட்சிகளை சார்ந்து இருப்பது என்றும், எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றும் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
செல்வந்பெருந்தகையின் பேச்சிற்கு முரணாக உரையாற்றிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருப்பதற்கு திமுகவும் , திமுக தலைவர் ஸ்டாலினும் தான் காரணம் என்றும், அதை மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். தனித்து நின்று டெபாசிட் கூட வாங்க முடியாமல் இருந்தோம் என அவர் பேசியதால் சர்ச்சை வெடித்தது.
முன்னாள், இந்நாள் தலைவர்களின் கருத்து மோதலால் கொந்தளித்த உறுப்பினர்கள், பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசாமல் திமுகவிற்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறீர்களே என கேள்வி எழுப்பியபடி அரங்கை விட்டு வெளியேறினர்.
இந்தப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மகாத்மா காந்திக்கு பெரியார் எழுதிய கடிதம் குறித்து பேசினார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் காந்தி அப்படியெல்லாம் கூறவில்லை என குரல் எழுப்பியபோது, தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்தால் பரபரப்பு நிலவியது.
மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவதிலும், உறுப்பினர்களிடையே மோதல் வெடித்ததுடன், உறுப்பினர்கள் உணவு வழங்க தாமதம் ஏற்பட்டதால், டேபிளை தள்ளிவிட்டு அங்கிருந்தும் கிளம்பினார்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் தலைவர்களின் கருத்து வேறுபாட்டாலும், உறுப்பினர்களின் மனக்கசப்பாலும் முடிந்தது. மேலும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி-க்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் பங்கேற்காதது உறுப்பினர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மாநில கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.