நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி நீட் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேஹ்தா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேசிய தேர்வு முகமை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு தரப்பில் அடுத்த விசாரணையின்போது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனுக்களை, ஏற்கனவே ஜூலை 8-ந்தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நீட் முறைகேடு விவகாரம் தொடர்பான மனுக்களோடு இணைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.