அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசுக் கல்லூரிகளில் 60க்கும் மேற்பட்ட கல்லூரிகள் முதல்வர் இன்றி செயல்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் கல்லூரியின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது என தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் முதல்வர்கள் பணி மூப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள், ஆகவே கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியலை கொண்டு ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் முதல்வர்கள் ஓய்வு பெறும் முன்பே புதிய முதல்வர்களை தேர்வு செய்து நியமிக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காலியாகக் கிடப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த முயல்வது தவறான அணுகுமுறை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.