தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளாக மாற்ற கடந்த 6 மாதத்திற்கு முன்பு தமிழக போக்குவரத்துதுறை அவகாசம் வழங்கியது. எனினும் சுமார் 547 பேருந்துகள் தமிழக பதிவெண்ணுக்கு மாற்றாமல் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளாக இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து இன்று முதல் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
விரைவாக பதிவு எண் மாற்றம் செய்யும் வசதி இல்லாததால் 500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்க முடியவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணிற்கு மாற்ற சிறப்பு முகாம் அல்லது ஒற்றை சாளர முறையை ஏற்படுத்த வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.