பாஜக குறித்து நேர்மறையாக தான் கூறும் கருத்துகள் மாநிலத் தலைவருக்கு எதிராக கூறப்பட்டதைப் போன்று சில நேரங்களில் திரித்துக் கூறப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் மையக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் பல ஏழை மாணவர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக உள்ளது என்றார். யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பள்ளிகளில் சாதி பிரச்சனைகளை தவிர்க்க, தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகள் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக உள்ளது என்றார். நெற்றியில் திலகத்துக்கு தடை என்றால் ஹிஜாப்புக்கும் தடை விதிக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என அரசிடம் பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக எச்.ராஜா தெரிவித்தார்.